Tuesday, July 8, 2014

கர்ப்ப காலத்தில் மாத்திரைகள் உள்ளெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் Taking Medicine During Pregnancy

கர்ப்ப காலத்தில் வயிற்றில் சிசு வளருவதால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் உட்கொள்ளும் சில தவறான மாத்திரைகளால் சிசுவின் பாதிப்புகளும் அங்கவீனக் குறைபாடுகளும் வரும் வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்ல தாயில்கூட சில முக்கிய தாக்கங்களை சிறுநீரகம் மற்றும் ஈரலில் பாதிப்புகள் ஏற்பட்டு அவற்றின்  தொழிற்பாடுகள் குறைந்து போகலாம்.
இவ்வாறு தாயிலும் சிசுவிலும் ஆபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க நாம் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் மருந்துகள் குறித்து மிகுந்த அவதானம் அவசியமாகும்.

ஆரம்ப கர்ப்ப காலத்தில் மாத்திரைகள் உட்கொள்ள முடியுமா?

ஆரம்ப கர்ப்ப காலம் என்பது முதல் மூன்று மாதங்களைக் குறிக்கும். இக்காலப்பகுதியில்தான் சிசுவின் அவயவங்கள் உருவாகும்  ஆரம்ப முக்கிய காலப் பகுதியாகும். இக்காலப் பகுதியில் முடிந்த அளவு நாம் மருந்துகள் உட்கொள்வதனைத் தடுக்க வேண்டும். ஆனா, இக்காலப்பகுதியில் ஃபோலிக் அசிட் (Folic Acid) எனப்படும் விற்றமின் மாத்திரைகள் கட்டாயம் எடுக்க வேண்டும். ஏனெனில், இப் ஃபோலிக் அசிட் சிசுவின் மூளை நரம்புப் பகுதிகள் குறைபாடுகள் எதுவுமில்லாது உருவாக உதவியளிக்கும். அத்துடன் ஆரம்ப கர்ப்ப காலப் பகுதியில் சில வேளைகளில் கருவின் வளர்ச்சியை சீராக்கும் ஹோர்மோன் மாத்திரைகள் வைத்திய ஆலோசனையின்படி பாவிக்கலாம் இதைத்தவிர வேறு எந்த மாத்திரைகளோ, விற்றமின்களோ நாம் ஆரம்ப காலத்தில் உட்கொள்வதனை தவிர்க்க வேண்டும்.

கல்சியம் இரும்புச்சத்து வில்லைகள் எப்பொழுது உட்கொள்ள வேண்டும்?

கல்சியம் இரும்புச்சத்து வில்லைகள் முதல் மூன்று மாதங்கள் முடிவடைந்த பின்னரே பாவிக்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், நான் மேல் குறிப்பிட்டதுபோல் ஆரம்ப கர்ப்ப காலத்தில் அவயவங்கள் தோன்றுவதால் முடிந்த அளவு மாத்திரைகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உட்கொள்ளக்கூடாத மாத்திரைகள் எவை?

கர்ப்ப காலத்தில் சரியான ஆலோசனையின்படி ஒரு வைத்திய நிபுணரின் சிபார்சிலேயே மாத்திரைகள் பாவிக்க வேண்டும். இவ்வாறு சில கிருமி எதிர்ப்பு மருந்துகள் (Antibiotic) மற்றும் சில வீரியமான வலி நிவாரணிகள் (Pain Killers) பாவிப்பதனை தவிர்க்க வேண்டும். ஆனால், சில வகைகள் எந்தவித பாதிப்புக்களையும் கொடுக்காது. ஆகையால் சரியாக தெரிவு செய்து பாவிக்க வேண்டும். அத்துடன் நீரிழிவு நோயுள்ள போது மாத்திரைகளுக்கு பதிலாக இன்சுலின் ஊசிதான் போட வேண்டும். இவ்வாறு இன்சுலின் ஊசி போடுவதால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை. தையிரொயிட் குறைபாடு உள்ளவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தைரொக்சின் மாத்திரைகள் பாவிக்க முடியும்.

கர்ப்பகாலத்தில் மாத்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியது எவை?
கர்ப்ப காலத்திலும்  சரி சாதாரண வாழ்க்கையிலும் சரி நாம் வைத்தியரின் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கக்கூடாது. அத்துடன் நாம் வாங்கும் மருந்துகளும் பார்மசிகளில் மாற்றங்கள் இல்லாமல் சரியாகத்தான் தருகிறார்களா என அவதானம் தேவை. ஏனெனில் மருந்தகங்களான பார்மசிகள் சில வைத்தியர் எழுதிய மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளையும் வேறு மருந்துகளையும் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. எனவே நீங்கள் மிகவும் நம்பகரமான பார்மசிகளில் அவதானமாக மருந்துகளை வாங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. சில இடங்களில் வைத்தியர்கள் எழுதிய மருந்துகளின் பெயரைக்கூட சரியாக வாசிக்கத் தெரியாதவர்களும் சரியான தகைமைகள் இல்லாதவர்களும் மருந்துகளை வழங்கும் போது மாற்று மருந்துகளும் தவறான மருந்துகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றில் வளரும் சிசுவும் பாதிக்கப்படலாம் தாயும் ஆபத்துகளை எதிர்நோக்கும் பல சந்தர்ப்பங்களை காணக்கூடியாக உள்ளது. அதுமட்டுமல்ல, நீங்கள் மருந்துகளை வாங்கும் போது நம்பகரமான பார்மசிகளை தெரிவு செய்வது மட்டுமல்ல மருந்துகள் காலாவதியாகும் திகதிகளையும் அவதானிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் விலைகளும் சரியானவையா என ஓரிரு மருந்தகங்களில் கேட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் எவை?

வைத்தியரின் மருந்துச்சீட்டு இல்லாமல் நாம் மருந்துகளை வந்து கேட்டால் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது சட்ட ரீதியான குற்றமாகும். அத்துடன் எழுதப்பட்ட மருந்துகள் இல்லாவிட்டால் அவை எம்மிடம் இல்லை என்ற உண்மையை தெரிவிக்க வேண்டும். இதற்கு மாறாக மாற்று மருந்துகள், பதில் மருந்துகள் எனக்கொடுப்பது தவறாகும். வைத்தியர் எழுதிய எழுத்துகள் வாசிக்க முடியாவிட்டால் ஒரு தகுதி வாய்ந்த மருந்தகரிடம் கேட்டு அறிய வேண்டும். இவை மக்கள் நலம் கருதி இத்துறையில் நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

No comments:

Post a Comment