Thursday, August 18, 2016

இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா ? Is eating bananas after meals good for health


இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.

இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.

ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும்.

உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறுவதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.

வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.

வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.

Friday, August 12, 2016

’விக்கல்’ நிற்க என்ன செய்யலாம்?


விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல் எடுக்கும், சில சமயங்களில் இது ஆபத்தில் கூட முடியும், மூச்சுக் குழாயில் உணவு சென்று அடைத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.

பெரியவர்கள் விக்கல் எடுத்தால், யாரோ நினைக்கின்றனர் என்று கூறுவர். ஆனால், விக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிப்பது தான் இதற்கான முக்கியக் காரணம்.

உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும்.

இதனை நிறுத்த சில வழிகள் உண்டு:

சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும்.

பாலிதீன் பைக்குள் சில நொடிகள் சுவாசிப்பதும் இதற்குத் தீர்வாக அமையும்.

ஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்க நேரும்போது விக்கல் நிற்கும்.

இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது. பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.